சென்னையில் இன்று (மே 15) தங்கத்தின் விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்திருந்த நிலையில், மாலை மேலும் ரூ.1,480 சரிந்தது. இதனால் ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு மொத்தம் ரூ.2,280 குறைந்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தங்கத் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க, ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதன் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி மே 12-ம் தேதி 6% லிருந்து 15% ஆக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 13-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்தது. பின்னர் விலை சற்று குறைந்தாலும், நேற்று (மே 14) மீண்டும் உயர்ந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் மேலும் விலை சரிந்து, ஒரு கிராம் ரூ.14,765-க்கும், பவுனுக்கு ரூ.1,18,120-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையும் காலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3,05,000-க்கும் விற்பனையானது. மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு, ஈரான் – அமெரிக்கா இடையேயான சர்வதேச பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி (ரூ.96) போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.