மகளிர் இலவச பேருந்து பயணச்சீட்டை கிழித்த அரசுப் பேருந்து நடத்துநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், சென்னை அம்பத்தூர் – தீவுத்திடல் வழித்தட அரசுப் பேருந்தில், பெண் பயணிகள் இல்லாதபோதும், இலவச டிக்கெட்டுகளை நடத்துநரே கிழித்து குப்பையில் போடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. Last Trip-ன் போது விரைவாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக, பேருந்துகளை பேருந்து நிறுத்தங்களில் முறையாக நிறுத்தாமல், பயணிகளிடம் முறைகேட்டில் ஈடுபடும் நடத்துநர்கள் இதுபோன்று செயல்படுவதாக கூறப்படுகிறது.
பேருந்து நிறுத்தப்படாதது குறித்து மக்கள் புகார் அளித்தால், அதை சமாளிப்பதற்காகவே இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டுகளை தங்களுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்துவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அம்பத்தூர் பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் கோவிந்தன், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண்களின் இலவச பயணச்சீட்டை கிழித்த விவகாரத்தில் தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.