புளோரிடாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில், ஈகான்லாகாச்சி ஆற்றில் முதலை தாக்கி பிரிட்னி கிளார்க் என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்லாண்டோவைச் சேர்ந்த 31 வயதான பிரிட்னி கிளார்க், தனது காதலர் சான்ஸ் அலிசன் மற்றும் தோழியுடன் லிட்டில் பிக் ஈகான் தேசியக் காட்டில் மலையேற்றம் சென்றிருந்தார். வெயிலின் தாக்கத்தைத் தணிக்க, அங்கிருந்த ஈகான்லாகாச்சி ஆற்றின் மூன்று அடி ஆழமுள்ள நீரில் இறங்கியபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
வழியில் சென்ற ஒருவர், 'இங்கே முதலைகள் நடமாட்டம் அதிகம், ஜாக்கிரதையாக இருங்கள்' என்று எச்சரித்த சில நிமிடங்களிலேயே, சுமார் 13 அடி நீளமுள்ள ஒரு ராட்சச முதலை யாரும் எதிர்பாராத கணத்தில் பிரிட்னியைத் தாக்கியது. முதலையின் கொடூரமான பிடியில் சிக்கிய பிரிட்னியின் இரண்டு கைகளையும் அது கவ்விப் பிடித்து, தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. தன் காதலியைக் காப்பாற்ற சான்ஸ் அலிசன் கடுமையாகப் போராடியபோதும், முதலையின் அசுர பலத்திற்கு முன்னால் அவரால் அவளது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
'நிலைமை மிகவும் மோசமாக உள்ளது!' என்று பதற்றத்தில் அலறியபடி சான்ஸ் 911 அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தபோது, பின்னணியில் பயங்கரக் கூக்குரல்கள் கேட்டன. முதலையின் தாக்குதலில் பிரிட்னியின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, அதீத இரத்த இழப்புடன் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிரிட்னியின் உயிர் பிரிந்தது.
இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, புளோரிடா வனவிலங்குப் பாதுகாப்பு ஆணையம், அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 அடி மற்றும் 12 அடி நீளமுள்ள இரண்டு முதலைகளை வேட்டையாடிக் கொன்றது. தெரியாத இடங்களுக்கும், அடர்ந்த காடுகளுக்கும் செல்லும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.