தனிப்பட்ட வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர், 'எல் நினோ' நிலைமை 'சூப்பர் எல் நினோ'வாக மாறக்கூடும் என்றும், இது தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
'எல் நினோ' உருவாகிவிட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் 'சூப்பர் எல் நினோ' உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தை உலக நாடுகள் ஏற்கனவே அனுபவித்து வருகின்றன. இந்தியாவிலும் இதுவரை தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், நீர்நிலைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
மேட்டூர், முல்லைபெரியாறு, பவானிசாகர், அமராவதி போன்ற முக்கிய நீர்நிலைகள் இந்த ஆண்டு நிரம்ப வாய்ப்பில்லை. இதனால், வரவிருக்கும் கோடையில் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 'சூப்பர் எல் நினோ', பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, 2027 ஆம் ஆண்டு கோடை வெப்ப அலை மற்றும் வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு உடனடியாக வறட்சி மற்றும் நீர் மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவில் வேளாண்மைத்துறை, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நீர்வளத்துறை, மின்சாரத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் இணைந்து, 'சூப்பர் எல் நினோ'வை எதிர்கொள்ளும் செயல்திட்டத்தை உருவாக்கி, உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களையும், நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களையும், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.