டல்லாஸில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடரின் முதல் லீக் போட்டியில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான பாப் டூ பிளெசிஸ், 41 வயதிலும் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் ஆர்காஸ் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ், தனது அபாரமான பேட்டிங் திறனால் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் வெறும் 52 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன் மூலம், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியில் பல ஆண்டுகள் விளையாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த டூ பிளெசிஸ், தற்போது அதே சூப்பர் கிங்ஸ் குடும்பத்தின் அங்கமான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். வெறும் 45 பந்துகளில் சதம் அடித்த அவர், எம்எல்சி தொடரில் 4 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
எம்எல்சி தொடரில் இதுவரை 26 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டூ பிளெசிஸ், 1047 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 43.62 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 167.25 ஆகவும் உள்ளது. வயது ஒரு வெறும் எண் என்பதை நிரூபிக்கும் வகையில், கடினமான இலக்கை எளிதாக துரத்தி, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் டூ பிளெசிஸ்.