சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், முன்னணிப் பயிற்சியாளர்கள் பலர் இந்தப் பதவிக்கு வரத் தயக்கம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம், அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி அணியில் இருப்பதுதான் என்று கூறப்படுகிறது.
கடந்த 2023-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, அதன் பிறகு 2024, 2025 மற்றும் தற்போது முடிவடைந்த 2026 சீசன் எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியுள்ளது. இந்தத் தொடர் தோல்விகளின் காரணமாக, தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மீது நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அணியைப் புதுப்பிக்கும் நோக்கில் புதிய பயிற்சியாளரை நியமிக்க நிர்வாகம் விரும்புவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் ஒரு முன்னணி இந்தியப் பயிற்சியாளரைத் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அணுகியதாகவும், ஆனால் அவரோ சிறிது காலம் காத்திருக்குமாறு நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு பயிற்சியாளர், தோனி அணியில் இருக்கும் வரை அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளாராம். அணியின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகளில் தங்களின் அதிகாரம் செல்லாது என்றும், தோனியின் தலையீடு பயிற்சியாளரின் சுதந்திரமான செயல்பாட்டைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கருதுவதாகக் கூறப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும், ஒட்டுமொத்த அணியின் கவனமும் அவர் மீதே இருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கூட ஒவ்வொரு போட்டியின் போதும் தோனியின் உடல்நிலை குறித்தே கேள்விகள் கேட்கப்பட்டன. இது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி தனது ஓய்வு குறித்து இன்னும் தெளிவான முடிவை எடுக்காததும், அணியின் ஆலோசனைகளில் அவரது தலையீடு இருக்கும் என்ற எண்ணமும் புதிய பயிற்சியாளர்களை வரவிடாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. பிளே-ஆஃப் கனவு கலைந்துள்ள நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.