இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்த இளம் வீரர் அபிஷேக் சர்மாவை முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் வெகுவாகப் பாராட்டியுள்ளார். பேட்டை சிறப்பாகக் கையாளும் அரிய திறமை இந்த தொடக்க வீரருக்கு உள்ளது என பதான் குறிப்பிட்டுள்ளார்.
டர்ஹாமில் நடந்த இந்தப் போட்டியில், அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 190 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும், மழை குறுக்கிட்டதால் போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது.
அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து பேசிய இர்ஃபான் பதான், 'போட்டி தொடங்குவதற்கு முன்பே, அவரிடம் அதிரடியாக விளையாடும் திறன் இருப்பதால், அவருடைய அணுகுமுறை மாறக்கூடாது என்று நாங்கள் கூறிக்கொண்டிருந்தோம். பேட்டின் மீது அவர் வைத்துள்ள கட்டுப்பாடு மற்றும் அதை அவர் கையாளும் விதம் அனைவரிடமும் இருக்கக்கூடிய திறனல்ல. ஆனால், அபிஷேக் சர்மாவிடம் அது உள்ளது' என்று அவர் கூறினார்.
மேலும், 'ஒரே ஓவரில் அவர் நேராகவும் விளையாடினார், பேட்டைத் திருப்பி ஸ்கொயர் திசையிலும் அடித்தார், பின்னர் புல் ஷாட்டையும் மிக எளிதாக விளையாடினார். தனக்கு எதிராக பந்துவீச வரும் வீரர் என்ன மாதிரியான வேரியேஷனுடன் வருகிறார் என்பதை மட்டும் அவர் தெரிந்து கொண்டால் போதும். அது தெரிந்தால், ஆடுகள சூழல்கள் அவருக்கு ஒரு பொருட்டல்ல, ஏனெனில் அவரால் அதற்கேற்ப காத்திருந்து ஆட முடியும்' என்றும் பதான் குறிப்பிட்டார்.
அபிஷேக் சர்மா தனது 59 ரன் இன்னிங்ஸின் போது, ஸ்ரேயாஸ் ஐயருடன் (47 பந்துகளில் 68 ரன்கள்) இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தினார். அவரது பணி வேகமான ரன் ரேட்டில் ரன்களைக் குவிப்பதே என முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
சபா கரீம் மேலும் கூறுகையில், 'அவரிடமிருந்து இதுபோன்ற இன்னிங்ஸ்கள் தான் எதிர்பார்க்கப்படுகின்றன. அபிஷேக் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு, சிறிது நேரம் எடுத்துக்கொண்டு ஷாட்களை விளையாட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், இந்த இடம் அவருக்கு உரியதல்ல. அவரது பணி அதிக ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவிப்பதாகும், இதுவே எப்போதும் இந்திய அணியின் தொலைநோக்கு பார்வையாக இருந்து வருகிறது. இடையில் ஒரு சில ஆட்டங்களில் தோல்விகள் வரலாம், ஆனால் அதற்காக ரன்களைக் குவிப்பதற்கான உங்களது வழக்கமான பாணியை மாற்றிக்கொள்ளக் கூடாது' என்று அவர் கூறினார்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் கேப் உருவாக்கி விளையாடிய விதம், ஷார்ட் பந்துகளுக்கு எதிராக லெக் சைடு நோக்கி நகர்ந்து விளையாடியது, இன்சைடு-அவுட் ஷாட்கள் மற்றும் அப்பர் கட் ஆடிய விதம், மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரது கால்களை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி விளையாடிய விதம் என அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வேலையை அவர் கச்சிதமாகச் செய்தார். இதுதான் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்று சபா கரீம் விவரித்தார். அபிஷேக் சர்மா தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், அணி நிர்வாகம் இந்த இடதுகை தொடக்க வீரருக்கு முழு ஆதரவை அளிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் அவர் இதே பாணியில் பேட் செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.