அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக விலகியுள்ளார்.
கடந்த 1980 முதல் கட்சியில் இணைந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கிளைக் கழகச் செயலாளர் முதல் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு உயர் பதவிகளைப் பெற்று விசுவாசமாகப் பணியாற்றியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். தற்போதுள்ள தலைமை திருப்பூர் மாநகரில் நிலவும் உட்கட்சிப் பூசல்களுக்குப் பலமுறை சுட்டிக்காட்டியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சாடியுள்ளார்.
மேலும், அண்மையில் நடந்த தேர்தலில் உண்மையாக உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கு வேண்டிய ஒரு சுயநலக் கூட்டத்தை மட்டுமே தற்போதைய தலைமை பாதுகாத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கருத்து சொல்பவர்களைத் துரோகிகளாகச் சித்திரரித்து வெளியேற்றி வருவதாகவும் தனது கடுமையான வேதனையைத் தெரிவித்து அவர் இந்த விலகல் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகவும், உட்கட்சிப் பூசல்களுக்கு நடவடிக்கை எடுக்காததாலும், உண்மையாக உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு சுயநலக் கூட்டத்தை மட்டுமே தலைமை பாதுகாப்பதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.