அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரிடம் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஆதரவாளர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், இன்பதுரை எம்பி உள்ளிட்டோர், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்று மனு அளித்தனர். இதுகுறித்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதை மீறி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 25 உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிசாமி ஏற்கனவே கடிதம் அளித்திருந்தார்.
அந்த கடிதம் பரிசீலனையில் இருக்கும் நிலையில், கட்சி தாவல் தடைச் சட்ட நடவடிக்கை பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். ஏற்கெனவே கட்சி தாவல் தடைச் சட்ட நடவடிக்கைக்கான கடிதம் ஆய்வில் இருக்கும்போது, அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது விதிகளுக்கும் சட்டத்திற்கும் முரணானது என்றும், எனவே அவர்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் விஜய் குதிரை வேகத்தில் செயல்படுவதாகக் கூறிய நிலையில், காலையில் ராஜினாமா செய்தவர்களுக்கு 5 நிமிடங்களில் உறுப்பினர் அட்டை வழங்கப்படுவதாகவும், இது தலைமைச் செயலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா எனத் தெரியவில்லை என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்தார். தூய்மையான ஆட்சியை தருவதாகக் கூறிய முதல்வர், முறைகேடாக பின்வாசல் வழியாக ஆட்சியை நிலைநிறுத்த குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ராஜினாமா செய்த ஐந்து எம்எல்ஏக்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளதாகவும், பழனிசாமி தலைமையேற்பதாகவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.