திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளதால், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் பல்வேறு விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ள இனிகோ இருதயராஜ், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், விஜய் தனது கட்சி சின்னங்களை அணிந்து தேவாலயத்தில் பிரச்சாரம் செய்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.