தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எழும்பூர், தாம்பரம், காட்பாடி மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு முக்கிய ரயில் நிலையங்களில், 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ அறைகளை அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் தகுதியான நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ரயில் நிலையங்களைப் பயன்படுத்தும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடி மருத்துவ உதவிகளை வழங்குவதாகும். இந்த மருத்துவ அறைகளில் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள், முதலுதவி வசதிகள், அவசர சிகிச்சைக்கான ஆதரவு, அத்தியாவசிய மருந்துகள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவை 24 மணி நேரமும் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்யப்படும்.
மேலும், மருத்துவ நெறிமுறைகள் மற்றும் ரயில்வேயின் வழிகாட்டுதல்களின்படி, மேம்பட்ட சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை உரிய நேரத்தில் அவர்களின் முதன்மை மருத்துவமனை அல்லது சுகாதார மையங்களுக்கு பரிந்துரைத்து அழைத்துச் செல்லவும் இந்த வசதி உதவும். தகுதியான மருத்துவமனைகள், சுகாதார சேவை நிறுவனங்கள் மற்றும் தேவையான அனுபவம் மற்றும் சட்டப்பூர்வ உரிமங்கள் கொண்ட மருத்துவ முகமைகள் இந்த டெண்டரில் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ள ஏலதாரர்கள் இந்திய ரயில்வேயின் www.ireps.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 1-ந்தேதி மாலை 3 மணிக்குள் தங்களின் ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 8072114520 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.