தமிழகத்தில் செயல்பட்டு வரும் தவெக ஆட்சியானது, 2011க்கு முந்தைய திமுகவின் ஆட்சியைப் போலவே மோசமாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆட்சிக்கு வந்து 15 நாட்களிலேயே மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும், சிறுவர் சிறுமியர் கொலை, பாலியல் வன்கொடுமைகள், ஆளுங்கட்சியினரின் மாமூல் வேட்டை, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆனால் முதல்வர் விஜய் இவற்றைக் கவனிக்காமல் 'ரீல்ஸ்' மோகத்தில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என அனைத்திலும் தோல்வியடைந்து, முதல்வர் விஜய்யும் அவரது அரசும் கோட்டைக்குள் ஒளிந்துகொள்வதுதான் 'மாற்று அரசியல்' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களுக்குத் தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டுமெனப் போராடும் மக்களை அலட்சியப்படுத்துவதுதான் தவெகவின் 'அனைவருக்குமான ஆட்சியா' என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
'திமுக எனும் தீயசக்தியை அழிக்க வந்த தூயசக்தி' என்று கூறிக்கொண்டு, தற்போது திமுகவின் அல்லக்கையாக தவெக அரசு செயல்படுவதாகவும், இதனால் அரசு மக்களிடம் அம்பலப்பட்டு வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.