புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றும், இந்த நடவடிக்கையின்போது ஒருவரின் குடியுரிமையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் மறுப்பது ஒருவரின் குடியுரிமையை பறிப்பதாகாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பிஹாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி, இவ்வளவு பரந்த அளவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என மனுதாரர்கள் வாதிட்டனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், ஜனவரி 29 அன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், 'சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. எந்தவொரு சட்டரீதியான அல்லது அரசியலமைப்பு ரீதியிலான விதியையும் தேர்தல் ஆணையம் மீறவில்லை. எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது குடியுரிமையை ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அது மேலதிக சட்ட ரீதியான விசாரணைக்கு உட்பட்டதாக இருக்கும். குடியுரிமையை நிரூபிக்க இயலாத காரணத்தால் பெயர்கள் நீக்கப்பட்ட நபர்களை, உரிய சட்டரீதியான விசாரணைக்காக தகுந்த அதிகார அமைப்பிடம் தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்க வேண்டும்' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும், அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.