கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. திருமண விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், சொந்த மகளையே கிணற்றில் தள்ளி கொலை செய்து உடலை புதைத்த கொடூர தந்தையின் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தும்கூரு மாவட்டம் நிம்ப மரதஹல்லி கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவருக்கு 17 வயதில் மகள் இருந்துள்ளார். அவரது திருமணத்தை, மனைவியின் உறவினர் ஒருவருடன், அவர் 18 வயது ஆனதும் நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. திருமணத்திற்கான துணிகள், தாலி போன்றவையும் வாங்கப்பட்டு தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திம்மராயப்பாவுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை. இது தொடர்பாக கடந்த 5 மாதங்களாக குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்துள்ளன. இந்த பிரச்சனை முற்றிய நிலையில், திம்மராயப்பா தனது மகளையே கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
கடந்த மாதம் 16-ஆம் தேதி, திம்மராயப்பா தனது மகளை கிணறு அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கே, மகளை வலுக்கட்டாயமாக கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். கிணற்றில் விழுந்த மகள், 'காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சியபோதும், இரக்கமின்றி கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு, மகளின் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று, யாரும் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு கொண்டு சென்று புதைத்துள்ளார். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி, வீட்டில் சகஜமாக இருந்துள்ளார்.
மாலை 6:30 மணியளவில் கூலி வேலை முடிந்து வீடு திரும்பிய திம்மராயப்பாவின் மனைவி, வீட்டில் மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, திம்மராயப்பாவும் மனைவியுடன் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இருப்பினும், காவல்துறையினரின் நுணுக்கமான விசாரணையில் திம்மராயப்பா சிக்கியுள்ளார். விசாரணையில், மனைவியின் உறவினருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லாததால், அவரை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.