1961 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி வெளியாகி, அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து ரசிகர்களின் மனங்களை வென்ற 'பாசமலர்' திரைப்படம், திரைக்கு வந்து 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சிவாஜி கணேசன் – சாவித்திரி அண்ணன் தங்கையாக வாழ்ந்த இந்த படத்தில், சாவித்திரியின் கணவராக ஜெமினி கணேசன் நடித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில், சாவித்திரி – ஜெமினி கணேசன் ஜோடி நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். பிரபல இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் வெளியான 'பாசமலர்' திரைப்படம் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடியது. விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற 'வாராயென் தோழி..', 'மலர்ந்தும் மலராத..', 'எங்களுக்கும் காலம் வரும்..' போன்ற பாடல்கள் இன்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளன.
'பாசமலர்' திரைப்படம் வெள்ளி விழா கண்டதுடன், 2013 ஆம் ஆண்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, தமிழகத்தில் 70 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பல திரையரங்குகளில் ஒரு மாதம் வரை ஓடி சாதனை படைத்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்திய அதே ரசிகர்கள், மீண்டும் திரையரங்குகளில் அதே உணர்வுகளை அனுபவித்தனர். இதுவே, 'பாசமலர்' திரைப்படத்தை காலத்தால் அழியாத காவியமாக நிலைநிறுத்தியது. அண்ணன் – தங்கை பாசத்தையும், எந்தச் சூழ்நிலையிலும் அறுபடாத பாசப்பிணைப்பையும் சித்தரித்த இந்தப் படத்திற்கு, திரைத்துறையில் ஒரு உன்னதமான இடம் வழங்கப்பட்டது. கிராமங்களில் இருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் பல மைல்கள் பயணித்து குடும்பத்துடன் வந்து 'பாசமலர்' படத்தைப் பார்த்தனர்.
இளமையும், எளிமையும், இலக்கிய நயமும் கொண்ட வசனங்களை 24 வயதே ஆன ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். படம் வெளியான முதல் நாளில், மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்ற நடிகை சாவித்திரி, பெண்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பெண்கள், 'பிறந்தால் இப்படியொரு அண்ணனுக்கு தங்கையாக பிறக்க வேண்டும்' என்று பேசிக்கொண்டிருந்ததை கேட்டு கண்கலங்கிய சாவித்திரி, 'சிவாஜியின் தங்கையாக நான் நிஜத்தில் பிறக்காவிட்டாலும், அவருடைய தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்' என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
'பாசமலர்' வெளியீட்டிற்கு முன்பாக, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படப்பிடிப்பில் இருந்த சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனை தொடர்பு கொண்டு, படத்தில் வெள்ளையத்தேவன் வேடத்தில் நடித்துக் கொடுக்க அழைத்தார். ஜெமினி கணேசன் தயக்கம் காட்டியபோது, சிவாஜி உடனடியாக சாவித்திரிக்கு போன் செய்து, 'தங்கச்சி மாப்ள தயங்குறான்மா.. அவர் நடிச்சா அற்புதமா இருக்கும்.. புத்தி சொல்லி அனுப்பி வை.. இதுக்கப்புறம் நான் போன் பண்ண மாட்டேன்' என்று கூறிவிட்டார். சிவாஜியை அண்ணனாகவே ஏற்றுக்கொண்ட சாவித்திரி, உடனடியாக தன் கணவர் ஜெமினி கணேசனை படப்பிடிப்புக்கு அனுப்பி வைத்தார். இந்த அண்ணன் – தங்கை பாசப் பிணைப்பின் காரணமாகவே, 65 ஆண்டுகள் கடந்தும் 'பாசமலர்' இன்றைக்கும் அனைவரது மனதிலும் வாடாத மலராக நிலைத்து நிற்கிறது.