அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அக்கட்சியின் முக்கிய தலைவர்களான நத்தம் ஆர். விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தில், கட்சியின் தற்போதைய நிலை குறித்தும், எதிர்காலத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
கடிதத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக நீங்கள் கட்சியை வழிநடத்திய விதத்தில் சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க எடுத்த முடிவு, கட்சிக்குள் இருவேறு கருத்துக்களுக்கு வழிவகுத்ததாகவும், இதன் காரணமாக 47 எம்.எல்.ஏக்களில் 25 பேர் திமுகவுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்கள், அத்துடன் 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக வெற்றிபெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தபோதிலும், நீங்கள் எடுத்த தன்னிச்சையான முடிவுகளால் தொடர் தோல்விகளைச் சந்தித்தது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மிகுந்த சோர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சோர்வில் இருந்து மீண்டு வர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வரும் சூழலில், கோவை, திருப்பூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த செயலாளர்களை எந்தவித காரணமும் இன்றி கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து, புதியவர்களை நியமிப்பது கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் செயல் என்றும், இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
கட்சி பொதுச்செயலாளராகிய நீங்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் உங்கள் கருத்துக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்து தெரிவிக்கக் கூடாது, உங்கள் செயல்பாடுகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில், கட்சி எந்த நிலைக்குத் தாழ்ந்தாலும் நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற மனப்பான்மையில், இதுவரை 400-க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை கட்சி சட்ட திட்டங்களுக்கு முரணாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளீர்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் 8 மாதங்கள் உள்ள நிலையில், ஆறு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதாகவும், இதில் கிளைக் கழகச் செயலாளர் முதல் அடிமட்டத் தொண்டர் வரை உள்ளாட்சிப் பதவிக்கு வருவார்கள் என்றும், இது மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக கட்சியைப் பலப்படுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுகவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல உண்மையான அக்கறையும் ஈடுபாடும் இருந்தால், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா வழியில் 'மறப்போம், மன்னிப்போம்' என்ற அடிப்படையில், கட்சி நலனைக் கருதி, மே 13-ம் தேதிக்குப் பிறகு பல்வேறு நிலைகளில் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்சியில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த பதவிகளை மீண்டும் வழங்கி, கட்சியை வலுப்படுத்த முன்வர வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
