திமுகவில் முக்கிய நிர்வாகிகள் மாற்றங்கள் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகனை நீக்கிவிட்டு, டி.ஆர்.பாலுவை நியமிக்க உதயநிதி ஸ்டாலின் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவில் இருந்து கட்சியை மீட்கும் பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக பல மாற்றங்களை கொண்டுவர அவர் முயன்றாலும், கட்சிக்குள் சீனியர் தலைவர்களிடம் இருந்து முட்டுக்கட்டைகள் வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஆட்சியைப் பிடிக்க கறாரான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என உதயநிதி ஸ்டாலின் கருதுவதாகவும், இதனால் பல சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த சூழலில், திமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகனுக்கு பதிலாக டி.ஆர்.பாலுவை நியமிப்பது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் தமிழக வெற்றிக்கழகம் பக்கம் சென்றது குறித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் ஆதரவு குறித்தும் நிர்வாகிகள் எடுத்துரைத்ததாக தெரிகிறது. திமுகவில் ஒரு பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவரை பொதுச்செயலாளராக நியமித்தால், அந்த சமூகத்தினரிடையே திமுக மீது நம்பிக்கை ஏற்படும் என நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, திமுகவின் கொள்கை போர்வாள் என அழைக்கப்படும் ஆ.ராசாவை பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என சிலர் உதயநிதிக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. தற்போதைய தமிழக வெற்றிக்கழக ஆட்சி மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக வலுவான கருத்துக்களை முன்வைக்கக்கூடியவர் ஆ.ராசா என்றும், அவரை நியமிப்பது கட்சிக்கு பலம் சேர்க்கும் என்றும் முக்கிய தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், திமுக பொருளாளர் பதவியில் இருந்து டி.ஆர்.பாலுவை மாற்றுவது குறித்த பேச்சு ஒருபுறம் இருக்க, அந்த பதவிக்கு கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு ஆகியோர் கடும் போட்டி நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.