திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகள் மற்றும் மருமகன் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பி. மேரி என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளார். திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் கராத்தே முத்துக்குமார் ஆகியோருடன் நீண்டகால குடும்ப நட்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நட்பைப் பயன்படுத்தி, அவசரத் தேவை எனக் கூறி மருத்துவர் மேரியிடமிருந்து பல தவணைகளில் சுமார் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்திற்குச் சொந்தமான 50 சவரன் தங்க நகைகளையும் தற்காலிகத் தேவைக்காகக் கேட்டு வாங்கிச் சென்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட பணத்தையும் நகையையும் நீண்ட நாட்களாகியும் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக மருத்துவர் மேரி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேரில் சென்று கேட்டபோது, திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் மருமகன் முத்துக்குமார் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தனது புகாரில் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பத்தினர் மீது எழுந்திருக்கும் இந்த பல லட்ச ரூபாய் மோசடிப் புகார், திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே இதன் முழு பின்னணி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.