டெல்லியில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தடுக்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் டெல்லி அரசு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்கள் இனி வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம். இது தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் பல நாடுகளில் உயர்ந்துள்ளன. இந்தியாவிலும் சில தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. இந்தச் சூழலில், எரிபொருள் சிக்கனத்தின் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றிய அனுபவத்தைப் பயன்படுத்தி, தேச நலனுக்காக மீண்டும் அதைச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.
பிரதமரின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, டெல்லி அரசு ஊழியர்கள் வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரியலாம். மேலும், அரசு அலுவல் ஆலோசனைக் கூட்டங்களில் 50% ஆன்லைனில் நடத்தப்படும். இது வாகனப் பயன்பாட்டைக் குறைத்து எரிபொருள் சேமிக்க உதவும். டெல்லி மாநகராட்சி ஊழியர்களின் பணி நேரங்களையும் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த உதவும்.
அரசு வாகனங்களின் பயன்பாடும் கட்டுப்படுத்தப்படும். அதிகாரிகளுக்கான மாதாந்திர பெட்ரோல் ஒதுக்கீடு 20% குறைக்கப்பட்டு, மாதத்துக்கு 200 லிட்டருக்கு மிகாமல் வழங்கப்படும். மேலும், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், 'மெட்ரோ மண்டே' மற்றும் 'நோ கார் டே' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். டெல்லி அரசு அடுத்த 6 மாதங்களுக்கு புதிய வாகனங்கள் எதுவும் வாங்காது என்றும் முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.