கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஐஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."
கடந்த 21-ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில், கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அதே இரவு வழக்குப் பதிவு செய்தனர். சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையின்போது, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் மூலம், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (33), சிறுமியின் குடும்பத்துக்கு பழக்கமான அண்டை வீட்டுக்காரர் என்பது தெரியவந்தது. சிறுமியை அவர்தான் அழைத்துச் சென்றதும் உறுதி செய்யப்பட்டது. கண்ணம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளி கார்த்தியை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். தப்பிக்க முயன்றபோது, மேல்மாடியில் இருந்து குதித்ததில் அவரது வலது கை, காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், குற்றவாளி கார்த்தி, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், பாரதிபுரம், பள்ளபாளையத்தைச் சேர்ந்த மோகன் (30) என்பவர், முக்கிய குற்றவாளிக்கு உதவியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கைது செய்யப்பட்ட கார்த்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி ரம்யா பாரதி உறுதியளித்தார். முதல்வர் விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.