சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கினார். சிங்கப்பெண் அதிரடிப் படை, போதைப்பொருள் கட்டுப்பாடு போன்ற முயற்சிகள் முதல் படியாக இருப்பதாகவும், கடந்த ஆட்சியில் கவனிக்கப்படாத பிரச்சனைகளுக்கு தற்போது தீர்வு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘ஜனநாயக அரசு, மன்னர் ஆட்சி இல்லை. மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி’ என குறிப்பிட்ட முதல்வர், தனது 40 நாள் ஆட்சியில் மதுபான கடைகள் மூடல், சிங்கப்பெண் சிறப்பு படை, மருத்துவத்துறைக்கு 40 புதிய வாகனங்கள், ஜல் ஜீவன் திட்டம், சட்டவிரோத கல்குவாரி மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்பு, பல்வேறு குவாரிகள் சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகளை பட்டியலிட்டார். இவை வெறும் சாம்பிள் என்றும், இன்னும் பலவற்றை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், கருவூலம் தேய்ந்துள்ளதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். ‘எங்களுக்கு மக்கள் பணியை செய்யத் தெரியும், மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது’ என மறைமுகமாக கடந்த ஆட்சியை விமர்சித்த அவர், டெண்டர் கட்டணத்தை உயர்த்த தெரியாது, கலந்தாய்விற்க்கு பணம் திரட்ட தெரியாது, பணியிடங்களுக்கு பணம் வாங்க தெரியாது, தங்கத்தை உருக்கி தாரை வார்க்க தெரியாது, கோவில் பணத்தை சுருட்ட தெரியாது, கனிமத்தை விற்று கொள்ளை அடிக்க தெரியாது, அரசு பணத்தை தனிப்பட்டவருக்கு மாற்ற தெரியாது, போதை கலாச்சாரத்தை வளர்க்க தெரியாது, பெண்களை மதிக்க தெரிந்தவர்களுக்கு ஓசி பஸ் ஆயிரம் கேஸ் கூற தெரியாது’ என ஊழல் பட்டியலை வெளியிட்டார்.
முதல்வர் விஜய் தனது உரையில், ‘இதெல்லாம் எங்களுக்கு தெரியாது தான். அது தெரிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை’ என்று கடந்த கால ஆட்சி நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முதல்வர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.