சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சியின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து சட்டப்பேரவையில் விமர்சித்தார். குறிப்பாக, டாஸ்மாக் வருவாயை கட்சி நிதிக்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் விஜய் பேசியபோது, தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், விஜய் பேசி முடித்த பிறகு அவர்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார். முதலமைச்சர் விஜய், ‘மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம். இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம். ஒவ்வொரு ஊழலும் வெளிய வரும் போலயே. இதில் நம் மீது அவதூறு வேறு. இப்போது புதிதாக ஒரு வெப்பன் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் தயவால் தான் நம் ஆட்சி நடக்கிறதாம், மக்கள் தயவால் இந்த ஆட்சி நடக்கிறது’ என்று கூறினார்.
மேலும், ‘நாங்கள் கட்சிகளை அனுப்பி வைத்தோம் என்று தி.மு.க சொல்கிறது. அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் ஏன் கதறுகிறீர்கள். இடதுசாரிகள் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் எல்லாம் த.வெ.க-விற்கு ஆதரவு கொடுத்தது சுயட்சையாக எடுத்த முடிவு என்று கூறுகிறார்கள். மக்களுக்கு நன்றாக புரியும். எல்லாவற்றையும் தெளிவாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும் முதலமைச்சர் விஜய் பேசினார்.
முதலமைச்சர் விஜய் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோதே, தி.மு.க உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இது சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.