கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'மாதா' என்ற விசைப்படகில் திடீரென பேட்டரி வெடித்ததில் தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென படகு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
படகு தீப்பிடித்தபோது அதில் 20 மீனவர்கள் இருந்தனர். தீயின் வேகம் மற்றும் புகை மண்டலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள், வேறு வழியின்றி கடலுக்குள் குதித்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக, கடலில் குதித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் 'மாதா' என்ற விசைப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் 1.25 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னமுட்டம் துறைமுகத்தில் அடுத்தடுத்து இதுபோன்ற விபத்துகள் நடப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.