தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கோம்பைத்தொழு அருகே இயற்கை எழில் கொஞ்சும் சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. கடந்த வாரமாக இப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக, தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிந்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள், அருவியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடி, நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை நாட்களில் அருவிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள போதிலும், சின்னச்சுருளி அருவியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், பெண்கள் தயக்கத்துடன் ஒரே இடத்தில் குளிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
மேலும், பெண்கள் பாதுகாப்பாக உடை மாற்றிக்கொள்வதற்கான அறைகள் பராமரிப்பின்றி, முட்செடிகள் சூழ்ந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே, சின்னச்சுருளி அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.