மதுரை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவி எண்ணில் அழைக்கும் சிறுமிகளை, தந்தை மற்றும் உறவினர்கள் மீது பாலியல் புகார் அளிக்க அதிகாரிகள் வற்புறுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய போக்கு என்றும், இது அதிகார துஷ்பிரயோகம் என்றும் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ஜாமீன் கோரி அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அவரது தரப்பில், மகளின் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டை கண்டித்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில், சிறுமி '1098' என்ற எண்ணில் பேசியதாகவும், அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தபோது, சிறுமியின் வாக்குமூலத்தில், பெற்றோர் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர '1098' எண்ணில் அழைத்ததாகவும், ஆனால் அழைப்பை ஏற்ற அதிகாரி, அவரது தந்தை 'மோசமாகத் தொட்டது' போல ஒரு புகாரை அளிக்க வற்புறுத்தியதாகவும், தூண்டுதலின் பேரிலேயே அவர் தந்தைக்கு எதிராகக் குற்றச்சாட்டை கூறியதாகவும் தெரியவந்தது. மேலும், 5 நாட்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டபோது, குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் மிரட்டி, தந்தைக்கு எதிராகப் புகார் கூறுமாறு வற்புறுத்தியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதன் மூலம், சிறுமிக்கு அழுத்தம் தரப்பட்டு, அவர் மூலம் மனுதாரருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் சில வழக்குகளில் நடப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய போக்கு என்றும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. '1098' மூலம் பெறப்படும் புகார்களுக்குப் பதிலளிக்கும் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள், காப்பகம், காவல்துறை பணியாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தென் மண்டல ஐஜி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், மனுதாரருக்கும் சிறுமிக்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.