சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திகண்ணப்பன் (57) என்பவர், முன்னாள் ராணுவ வீரராக இருந்து, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தின் 2-வது தளத்தில் அவர் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை 6 மணிக்கு அவரை பணி மாற்றம் செய்வதற்காக மற்றொரு காவலர் அங்கு சென்றபோது, காந்திகண்ணப்பன் அங்கு இல்லை. அவரைத் தேடியபோது, அவர் அந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சென்னை விமான நிலைய போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து பரிசோதனை செய்தனர். அதில் அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

