காவலர் கை முறிவு வதந்தி: தஞ்சை காவல்துறை விளக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காவலர் ஒருவரின் கை முறிந்ததாக வெளியான செய்தியை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. உள்ளூர் திருவிழாவிற்காக பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவருக்கும், ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையே போக்குவரத்து இடையூறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக, ஒரு தமிழ் ஊடகத்தில், ‘தவெகவினர் பேனர்களை சாலையின் குறுக்கே வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், பேனரை அகற்ற முயன்ற காவலர் தேவேந்திரனை தவெக வார்டு உறுப்பினர்களான அருண், காளி ஆகியோர் தாக்கியதில் அவரது வலது கையின் மணிக்கட்டு எலும்பு முறிந்தது’ என செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘மே 23, 2026 அன்று, உள்ளூர் தெருத் திருவிழாவிற்காக பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவருக்கும், ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையே போக்குவரத்து இடையூறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை வைத்து, காவலர் தேவதானின் கை முறிந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், காவலர் தேவதானுக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல’ என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது என்றும், எந்தவொரு தகவலையும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் பகிர்வது சட்டப்படி குற்றமாகும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற வதந்திகளைக் கண்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புமாறும், பொறுப்பற்ற முறையில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version