நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துநராகப் பணியாற்றி வந்த தம்பிதுரை, ஜாதியப் பாகுபாடு காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திடீரெனப் பணிநீக்கம் செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தைக் காப்பாற்ற உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
'ரொம்ப நாள் வேலை பார்க்கிறேன்' என்று கூறி, திடீரெனப் பேருந்திலிருந்து இறக்கி, தனது பணிக்கான அடையாள அட்டையையும் பறித்துக்கொண்டு இனி வேலைக்கு வரக்கூடாது என்று கூறிவிட்டதாகக் கண்ணீர் மல்கக் கூறினார். தனது பிள்ளைகளுக்குக் கஞ்சித் தண்ணீர் கொடுக்கும் நிலையைப் பார்க்கும்போது மிகுந்த வேதனையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 19ஆம் தேதி எந்தவிதக் காரணமும் இன்றி தன்னை பணியில் இருந்து நீக்கியதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் நடத்துநர் பணியைக் கேட்டதற்கு, அதற்குப் பதிலாகத் தூய்மைப் பணியைத் தருவதாக அதிகாரிகள் கூறுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
திடீரெனப் பணிநீக்கம் செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தற்காலிக நடத்துநர் தம்பிதுரையின் கண்ணீர் மல்கிய பேட்டி, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உரிய பணி வழங்கக் கோரி அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.