தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, மேலும் சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. இதைத் தொடர்ந்து, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தற்காலிக சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 17-வது சட்டமன்றக் கூட்டம் நேற்று ஆரம்பமானது. இதில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் நேற்று சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
இந்தச் சூழ்நிலையில், பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே சட்டமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக, சட்டசபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. யாரும் போட்டியிடாததால், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்பின்னர், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை, மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரு கைகளையும் பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்திப் பேசினர்.
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பேசுகையில், "அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் முதலமைச்சர் விஜய் சிறப்பான நல்லாட்சியை வழங்க வேண்டும்; த.வெ.க. அரசு தொடர்ந்து செயல்பட எனது ஆதரவை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.