அசாம் மாநில சட்டப்பேரவையில் இன்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் உத்தராகண்ட், குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து அசாமிலும் இனி பொது சிவில் சட்டம் அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது அவரால் குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை என்றாலோ கணவன் மறுமணம் செய்ய முடியாது. மேலும், மனைவி உயிருடன் இருக்கும்போது வேறொரு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் ஈடுபடவும் அனுமதி இல்லை. லிவ்-இன் உறவிலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், 'மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக ஆண்கள் மறுமணம் செய்வதை எனது அரசு அனுமதிக்காது. திருமணம் என்பது 7 ஜென்மம் தொடரும் ஆன்ம ஒப்பந்தம். மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது, மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்' என்றார். இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
லிவ்-இன் உறவு குறித்து பேசிய முதல்வர், 'மாநிலத்தில் லிவ்-இன் உறவில் இருப்போர் அதை பதிவு செய்வது கட்டாயம். ஒரு நபர் ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டுமே லிவ்-இன் உறவில் இருக்க முடியும். திருமணமானவர்கள் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. லிவ்-இன் உறவு முறிந்தால், அந்தப் பெண் திருமணமான மனைவிக்கு இணையான சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவார்' என்றும், சொத்துரிமையில் பிள்ளைகள், பெற்றோருக்கும் சம உரிமை உண்டு என்றும் முதல்வர் விளக்கினார். இந்தச் சட்டம் பெண்கள் நலன் சார்ந்தது என்றும், சிறுபான்மையின சமூகப் பெண்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.