புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் விஜய் இன்று சந்தித்து பேசினார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை முதல்வர் விஜய் பிரதமரிடம் நேரில் வழங்கினார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை புறப்பட்டார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய்க்கு, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது. பிரதமர் உடனான சந்திப்பின்போது வலியுறுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து முதல்வர் விஜய், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, முதல்வர் விஜய் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது, மேகேதாட்டு அணை, இருமொழி கொள்கை, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பிஎம்ஸ்ரீ திட்ட நிதி, தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள மத்திய நிதி, தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மேம்பாடு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் விஜய் பிரதமரிடம் வழங்கினார்.
பிரதமர் உடனான சந்திப்பு நிறைவடைந்த பிறகு, முதல்வர் விஜய் மீண்டும் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பினார். இதைத் தொடர்ந்து, அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க உள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி ஆகியோருடனும் முதல்வர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
