கரூர் மாவட்டத்தில் சிபிஐ விசாரணையில் உள்ள 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விவரம் தெரியாதவரா நமது தமிழக முதல்வர்? இது பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என முதல்வருக்குத் தெரியாதா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்பது எங்கள் தமிழக முதல்வருக்குத் தெரியாதா? இது பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என முதல்வருக்குத் தெரியாதா? 41 பேர் கொலைக்குக் காரணம் காவல்துறையே என அபாண்டத்தை அள்ளி வீசுவது முதல்வருக்கு அழகாக இருக்கிறதா? இதனை இருமுறை டெல்லி சிபிஐ விசாரணைக்குச் சென்றபோது மேற்படி குற்றச்சாட்டைத் தெரிவித்தீர்களா?' என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் அரசு தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா? அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வழிகாட்டுதலோடு ஆணவ வசனம் பேசி வருகிறாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் 'பார்ட்டி ஃபண்ட்' என்று சொன்னதும் திமுகவினர் ஓடிவிட்டார்கள் என்று வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் நக்கலடிக்கும் முதலமைச்சர் அவர்களே, தேர்தலுக்கு முன் உங்கள் சட்டமன்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை 'பார்ட்டி ஃபண்ட்' பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக உங்கள் ரசிகர்களும், த.வெ.க கட்சியினரும் புலம்புவது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா? இது 'பார்ட்டி ஃபண்ட்' இல்லையா? இதுதான் தூய ஆட்சி ஆட்சியின் லட்சணமா?' என்றும் அவர் தனது பதிவில் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
