சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ சரவணன் மீது, கட்சிப் பொறுப்புகளை வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தவெக கட்சிக்குள்ளும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கட்சியின் சோழிங்கநல்லூர் வட்ட துணைச் செயலாளராகப் பணியாற்றும் வைதேகி, எம்.எல்.ஏ சரவணன் மீது பகிரங்கமாக இப்புகாரை முன்வைத்துள்ளார். கட்சியில் முக்கியப் பொறுப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் எம்.எல்.ஏ லஞ்சம் பெற்று ஊழலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது குறித்து அவரிடம் நேரில் கேட்டபோது, தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் வைதேகி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், தவெக கட்சித் தலைமைக்கும் வைதேகி ஆதாரங்களுடன் புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.
முன்னதாக, சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், 'மக்கள் பணத்தைத் தொட்டவர்களை ஒருபோதும் விடமாட்டோம்; ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்' என ஆவேசமாக உரையாற்றியிருந்தார். அவர் பேசி முடித்த சில மணி நேரங்களிலேயே அவரது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ மீதே ஊழல் மற்றும் மிரட்டல் புகார்கள் கிளம்பியுள்ளது கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகார் குறித்து கட்சித் தலைமை மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், முதலமைச்சர் விஜய் தனது கொள்கைப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது கட்சித் தலைமையால் நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.