சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் இந்த விலை உயர்வு அதிகமாக காணப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், டேங்கர் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, கடந்த 15-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த 11 நாட்களில் 5 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. நேற்றும் நாடு முழுவதும் பெட்ரோல் 34 காசுகளும், டீசல் 23 காசுகளும் விலை உயர்ந்தன. இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01க்கும், டீசல் ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் ரூ.102.12, டீசல் ரூ.95.20, மும்பையில் பெட்ரோல் ரூ.111.21, டீசல் ரூ.97.83, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.113.51, டீசல் ரூ.99.82 என விற்பனை செய்யப்படுகிறது.
இந்த முக்கிய நகரங்களை விட சற்று அதிகமாக ஹைதராபாத்தில் பெட்ரோல் ரூ.115.62, டீசல் ரூ.103.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவிலேயே ஆந்திராவில் தான் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. விஜயவாடாவில் பெட்ரோல் ரூ.117.25, டீசல் ரூ.104.96 ஆகவும், விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் ரூ.116.39, டீசல் ரூ.104.11 ஆகவும் உள்ளது.
குறிப்பாக, திருப்பதி மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.117.88, டீசல் ரூ.105.49 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே நாட்டிலேயே மிக அதிக விலையாகும். இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.