விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு அவரை பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரத்தழுவி வரவேற்றார். இருவரும் சுமார் 3 நிமிடங்கள் கண்ணீர்விட்டு அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியின் 61வது திருமண நாளை முன்னிட்டு ஆசிர்வாதம் பெற அன்புமணி குடும்பத்துடன் சென்றார். கடந்த 2 ஆண்டுகளாக தந்தை-மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தந்தையை சந்தித்துவிட்டு வெளியே வந்த அன்புமணியிடம், ராமதாஸுடனான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, 'இனி நல்லது நடக்கும்' என்று தெரிவித்தார்.
மேலும், 'அப்பா, அம்மாவுடைய திருமண நாள் என்பதால் குடும்பத்துடன் சென்று ஆசிர்வாதம் பெற்றோம்' என்றும் அன்புமணி கூறினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.