திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் உள்ள அம்மா உணவகத்தின் முகப்பில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா கடும் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'சோழம்பேடு சாலையில் உள்ள அம்மா உணவகத்தின் முகப்பில், 'அம்மா உணவகம்' என்ற பெயருக்கு அருகே இருந்த புரட்சித்தலைவி அம்மாவின் புகைப்படம் நீக்கப்பட்டு இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
'அம்மா உணவகம்' என்பது ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் உன்னதமான மக்கள் நலத்திட்டம் என்றும், இந்தியாவிலேயே முதல் முறையாக மலிவு விலையில் உணவு வழங்கும் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கி வைத்ததாகவும் சசிகலா நினைவு கூர்ந்தார். இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பார்வையிட்டு வியந்து பாராட்டியுள்ளன என்றும், வெளிநாட்டு அமைச்சர்களும் வந்து பார்வையிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும், கொரோனா போன்ற ஊரடங்கு நேரங்களிலும் தவறாமல் உணவளித்த மகத்தான திட்டம் 'அம்மா உணவகம்' என்றும், இத்தகைய சிறப்புமிக்க திட்டத்தை வகுத்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றுவது வருத்தமளிக்கிறது என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார். திமுக தலைமையிலான அரசு அம்மா உணவகங்களை மூடிக்கொண்டிருந்த நிலையில், தற்போதுள்ள புதிய அரசு அதனைத் தொடர்ந்து செயல்படுத்த முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, மக்களுக்காக வாழ்ந்து, மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் புகைப்படத்தை மீண்டும் அம்மா உணவகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
