2021 இல் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, ஆப்கானிஸ்தானின் ஆட்சித் தலைமை தாலிபான்களிடம் சென்றது. மத அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்ட தாலிபான்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறித்து, கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளனர். குறிப்பாக, பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது ஆண் துணையுடன் செல்ல வேண்டும் போன்ற கடுமையான சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. சர்வதேச அளவில் இதற்குக் கண்டனங்கள் எழுந்தாலும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் சிறைவாசம் அனுபவிப்பதைப் போன்ற சூழலே நிலவுகிறது.
தற்போது, நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், தாலிபான் அரசு திருமணங்கள், விவாகரத்துகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு தொடர்பான 31 விதிகளுடன் கூடிய புதிய குடும்பச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் மிக சர்ச்சைக்குரிய அம்சம் என்னவென்றால், திருமணம் செய்யவிருக்கும் ஒரு கன்னிப் பெண்ணிடம் சம்மதம் கேட்கும்போது, அவர் அமைதியாக இருந்தாலோ அல்லது மௌனமாக இருந்தாலோ, அது திருமணத்திற்கான சம்மதமாகவே கருதப்படும். பெண்கள் வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்காத வரை, அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், இந்த புதிய சட்டத்தின் கீழ், மைனர் குழந்தைகளுக்கான திருமணங்களுக்கும் தாலிபான் அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தப் பிள்ளைகளின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு இந்தத் திருமணங்களை ஏற்பாடு செய்வதற்கான முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மணமகன் சமூக ரீதியாகத் தகுதியானவராகவும், மதக் கோட்பாடுகளின்படி வரதட்சணை சரியாக வழங்கப்பட்டால் மட்டுமே இந்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில் 'கியார் அல்-புலூக்' என்ற சட்டக் கோட்பாடும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒருவர் பருவமடைந்த பிறகு, தாலிபான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்தத் திருமணத்தை ரத்து செய்துகொள்ள முடியும். மேலும், கணவன் அல்லது மனைவி கொடுமைப்படுத்துபவர்களாகவோ, மனநலம் குன்றியவர்களாகவோ அல்லது ஒழுக்கக்கேடானவர்களாகவோ நிரூபிக்கப்பட்டால் திருமணங்கள் ரத்து செய்யப்படலாம். இத்தகைய வழக்குகளில், நீதிபதிகளுக்குப் பிரிந்து செல்ல உத்தரவிடவோ, சிறைத் தண்டனை அல்லது பிற தண்டனைகளை வழங்கவோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.