சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் பல்வேறு முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் எங்கள் மாவட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு கட்சியை வெற்றி பெறச் செய்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் ஒற்றுமையாகப் பணியாற்றியிருந்தால், நிச்சயமாக அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தலைமை அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து பொறுப்புகள் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரையும் தலைமை அழைத்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். அப்படி அழைக்கும்போது, கூட்டத்திற்கு வந்து வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணங்களைச் சொல்ல வேண்டாமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கட்சியில் உள்ள உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பொதுச்செயலாளரிடம் தங்கள் தோல்விக்கான காரணங்களைத் தெரிவிக்க முடியும். ஆனால், சில நிர்வாகிகளும், ஒன்றிய, நகரச் செயலாளர்களும் அந்தக் கூட்டத்துக்கு ஏன் வரவில்லை? என்ன பயம் அவர்களுக்கு? செய்த தவறுகளை மறைப்பதற்காக பொதுச்செயலாளர் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
திமுகவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டமாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கு பாமக காரணம் என்று கூறுவதை அவர் மறுத்தார். எடப்பாடி பழனிசாமியின் உழைப்பும், கூட்டணிக் கட்சிகளின் பலமும்தான் வெற்றிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
பாமகவால் தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம் என்று கூறுவது சரியல்ல என்றும், விழுப்புரத்தில் 2016-ல் பாமக போட்டியிட்டபோது ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தார்? எதனால் வெற்றி வாய்ப்பை இழந்தார்? என்றும் அவர் சி.வி.சண்முகத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இனி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
1996-ல் ஜெயலலிதா இருந்த போது கூட அதிமுக நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு எத்தனையோ மாற்றங்கள் நடந்திருக்கின்றன. வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. எப்போது தேர்தல் வந்தாலும், மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி அமைத்துத் தருவார் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
