அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். தமிழகத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்எல்ஏக்கள் சிலர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டு, அந்த தொகுதிகள் காலியானதாக அறிவித்தார்.
இந்நிலையில், சி.வி.சண்முகம் அணியில் இருந்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவரிடம் வழங்கினார். முதலில் அவர் வழங்கிய தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை ஏற்க பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். 'ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதிய கடிதத்தை மட்டுமே ஏற்க முடியும்' என்று அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி பேரவைத் தலைவரிடம் வழங்கினார். அதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பையா, 'எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தபோது பெரிய அளவில் நலத்திட்டங்களை கொண்டுவர முடியவில்லை. இப்போது எனது அம்பாசமுத்திரம் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் தவெகவில் இணைந்துள்ளேன்' என்று தெரிவித்தார்.
அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் இருந்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய மூவர் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், தற்போது அந்த 4 தொகுதிகளும் காலியாகிவிட்டதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்த நிலையில், தமிழகத்தில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன.