தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், 'இப்போதும் அதிமுகவுடன் இருக்கிறேன். அதிமுக கூட்டணியில்தான் இருக்கேன்' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'விஜய் ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும்' என பலரும் பல வழிகளில் முயற்சி செய்ததாகவும், ஆனால் அதிமுக கூட்டணியில் இருக்கும்போது, நேர் எதிரான மற்றொரு கூட்டணியில் சென்று ஆதரவு தரக்கூடாது என நினைத்ததாகவும் அவர் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதிமுக கூட்டணியில் இருப்பதுதான் கூட்டணி தர்மம் என்றும், அதுவே தனது குணாதிசயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கடினமான நேரத்திலும் அதிமுகவுக்கு ஆதரவாகவே இருப்பதாகவும், அதிமுகவும் அமமுகவும் ஒரே கட்சியாக இணைந்துதான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வந்திருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம் என்றும் தினகரன் தெரிவித்தார். ஆனால், தனது கட்சியிலிருந்து எந்த நிர்வாகிகளும், தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் இதுகுறித்து தன்னிடம் பேசவில்லை என்றும், 'சரி, பார்ப்போம்.. வெயிட் பண்ணுவோம்' என்றும் அவர் ட்விஸ்ட் வைத்துள்ளார்.
இதன் மூலம், அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் இணைப்பு தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் உறுதியாகி உள்ளன. இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.