கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலத்தில், அரசு அனுமதியுடன் ஏரியில் வண்டல் மண் எடுக்கச் சென்ற விவசாயிகளிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இணை செயலாளர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, அந்த நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'தங்கள் விவசாய நில மேம்பாட்டிற்காக அரசு அனுமதித்துள்ள இலவச வண்டல் மண்ணை ஏற்றிச் செல்லும்போது, தவெக இணை செயலாளர் புகழ் வேந்திரன் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதைத் தட்டிக்கேட்ட விவசாயிகளையும் அவர் அராஜகமான முறையில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'டிராக்டரில் மண் எடுப்பதற்காக எங்களிடம் அனுமதி உள்ளது. இருப்பினும், தவெக நிர்வாகி புகழ் வேந்திரன் ரூ.1 லட்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார். இந்தத் தொல்லையும், லஞ்சப் பேரம் விஜய்யின் கவனத்திற்குச் செல்ல வேண்டும்' என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த லஞ்சப் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.