‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை ஊர்வசி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். புகழ்பெற்ற இயக்குநர், நடிகர் கே. பாக்யராஜ் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை வழங்கியவர். இவர் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (ஜூன் 27) இயக்குநர் பாக்யராஜ் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தொடர் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இயக்குநர் கே. பாக்யராஜ், ஜனவரி 7, 1953 அன்று ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே சிறுவலூரில் உள்ள வெள்ளாங்கோயிலில் கிருஷ்ணசாமி – அமராவதி தம்பதியினருக்குப் பிறந்தார்.
தனது குருநாதரான இயக்குநர் பாரதிராஜாவிடம் '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய பாக்யராஜ், 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 1979-ல் வெளியான 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்தார். ஒரே ஆண்டில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஒரே சாதனையாளர் பாக்யராஜ் ஆவார். இவர் இயக்கிய முக்கியப் படங்களில் 'சுவர் இல்லாத சித்திரங்கள்', 'மௌன கீதங்கள்', 'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'சின்ன வீடு', 'இது நம்ம ஆளு' ஆகியவை அடங்கும். இவர் நடித்த படங்களில் '16 வயதினிலே', 'தூறல் நின்னு போச்சு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இயக்குநர் பாக்யராஜ், முதலில் நடிகை பிரவீணா என்பவரைத் திருமணம் செய்தார். அவர் 1983-ல் காலமானார். பின்னர், 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் நடித்த நடிகை பூர்ணிமாவை 1986-ல் மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு (நடிகர்) மற்றும் சரண்யா (நடிகை) என இரு குழந்தைகள் உள்ளனர். 'முந்தானை முடிச்சு' (1983) திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகர் விருதை வென்றார். 2014-ல் SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. 'பாக்யா' எனும் வாரப் பத்திரிகையைத் தொடங்கி பல நாவல்களையும் எழுதியுள்ளார். இயக்குநர் பாக்யராஜ் தன்னுடைய 73-வது வயதில், மாரடைப்பு காரணமாக ஜூன் 27, 2026 அன்று சென்னையில் காலமானார். இவரது மறைவு தமிழ் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் பெரும் பேரிழப்பாகும்.
‘முந்தானை முடிச்சு’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை ஊர்வசி ஒருமுறை பகிர்ந்து கொண்டார். 'படப்பிடிப்பில் கேமரா ஆஃப் நிலையில் இருந்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். செட்டில் குழந்தைகள் என்னைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், ‘ஷாட் ரெடி’ என்று இயக்குநர் சொன்ன உடனே எனக்கு பயம் வந்துவிடும்' என ஊர்வசி நினைவுகூர்ந்தார். தன்னை நடிக்க ஊக்கப்படுத்தியதில் இயக்குநர் பாக்யராஜின் பங்கை நன்றியுடன் நினைவுகூரும் ஊர்வசி, 'என்னுடைய நடிப்பை வடிவமைத்ததே பாக்யராஜ் சார் எடுத்த முயற்சிகள்தான். படம் வெற்றி பெற நான் தனியாக எதையும் செய்யவில்லை. செட்டில் யாராவது என்னை திட்டினால், அப்படியே நடந்து வீட்டுக்கே போய்விடுவேன்' என்று கூறியுள்ளார். கல்பனா, ஊர்வசி ஆகிய சகோதரிகளை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். 1983ஆம் ஆண்டு வெளியான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம், வெறும் 13 வயதிலேயே ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். 'இன்றும் எந்தப் படப்பிடிப்புக்கும் மேக்கப் போடுவதற்கு முன் அவரை நான் நினைத்துப் பார்ப்பேன். அவருடைய வழிகாட்டுதல் இல்லையென்றால் இன்று நான் யாராக இருந்திருப்பேன் என்பதே எனக்குத் தெரியாது' என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.