நடிகர் செந்திலின் மூத்த மகன் மணிகண்ட பிரபு, தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். சிறுவயதில் அப்பாவிடம் ஏன் எப்போதும் அடிவாங்கும் கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறீர்கள் என்றும், ஒரு முறையாவது திருப்பி அடிக்கும் காட்சிகளில் நடிக்கலாமே என்றும் கேட்டதாக அவர் நினைவு கூர்ந்தார்.
அதற்கு நடிகர் செந்தில், 'இயக்குநர்களின் கற்பனையை மாற்றச் சொல்ல முடியாதுப்பா…' என்று பதிலளித்ததாக மணிகண்ட பிரபு கூறினார். அப்போது அந்த பதிலின் அர்த்தம் தங்களுக்கு புரியவில்லை என்றும், ஆனால் இன்று திரும்பிப் பார்க்கும்போதுதான் அதன் உண்மையான காரணம் புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குடும்பத்தின் நலனுக்காகவே நடிகர் செந்தில் கடினமான கதாபாத்திரங்களையும் எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்று நடித்துள்ளார் என்பதை உணர்ந்ததாக மணிகண்ட பிரபு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நடிகர் செந்தில், கடந்த 1984-ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு மருத்துவராக பணியாற்றி வருகிறார். தனது தந்தையின் நடிப்பு வாழ்க்கை மற்றும் குடும்பப் பாசம் குறித்து மணிகண்ட பிரபு மனம் திறந்து பேசியது பலரையும் நெகிழ வைத்துள்ளது. தந்தையின் தியாகத்தை உணர்ந்த மகன் அவரைப் பாராட்டியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் செந்திலின் இந்த குணம் பலருக்கும் உதாரணமாக அமைந்துள்ளது.
