திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாமியாரை தாக்கிய ஐஸ் வியாபாரியை, அவரது மைத்துனர்கள் அடித்து கொலை செய்துவிட்டு, விபத்து நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மைத்துனர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த முருகன் (45), ஐஸ் வியாபாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது மனைவி பொன்மொழிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறின் போது, முருகனின் மனைவி பொன்மொழியின் தாய் காசி அம்மாள் (70) தலையிட்டு, மகளை சமாதானம் செய்து, முருகனை கண்டித்துள்ளார். மேலும், முருகனின் குடிப்பழக்கத்தையும் கண்டித்துள்ளார். இதனால் மாமியார்-மருமகன் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த முருகன், மாமியார் காசி அம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார். இதில் காசி அம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த காசி அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
நடந்த சம்பவத்தை தனது மகன்களான பழனிசாமி (51) மற்றும் பாண்டியன் (41) ஆகியோரிடம் காசி அம்மாள் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், முருகன் வீட்டுக்கு சென்று, 'ஏன் எங்கள் தாயை தாக்கினாய்?' என்று கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த முருகன், மைத்துனர்கள் இருவரையும் தாக்க முயன்றுள்ளார். அப்போது, பாண்டியன் அங்கிருந்த கட்டையை எடுத்து முருகனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
பயந்துபோன பழனிசாமி மற்றும் பாண்டியன், முருகன் விபத்தில் சிக்கியதாக கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விசாரணையில், மைத்துனர்களே முருகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தாங்கள் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.