இந்தியாவில் வரலாற்றிலேயே முதல் முறையாக, சுமார் ரூ.182 கோடி மதிப்பிலான 'ஜிகாதி போதைப்பொருள்' என அழைக்கப்படும் கேப்டகன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
'ஆபரேஷன் ரேஜ்பில்' என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம், டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்த இருந்த இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, சிரியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருளுக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்குள் நுழையும் அல்லது இந்தியாவை கடந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் எந்தவொரு போதைப்பொருளையும் நாங்கள் கைப்பற்றுவோம். துணிச்சலுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) வீரர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கேப்டகன் என்பது ஃபெனெத்தில் என்ற செயற்கை ஊக்க மருந்தின் வணிகப் பெயர். இது 1960களில் கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற நோய்களுக்கான சிகிச்சையாக உருவாக்கப்பட்டது. ஆனால், இதன் அடிமையாக்கும் தன்மை மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் காரணமாக 1980களில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டது. சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்கள் தங்கள் படையினரின் சோர்வை நீக்கவும், விழிப்புணர்வு மற்றும் துணிச்சலை அதிகரிக்கவும் இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இது 'ஜிகாதி போதைப்பொருள்' என்று அழைக்கப்படுகிறது.