உலகளாவிய போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பாஜக பிரமுகர் சவுபாக்ய சிங் தாக்கூர் மீது அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, பொதுமக்கள் தங்க நகை வாங்குவதைத் தள்ளிப்போடவும், பெட்ரோல், டீசலை சிக்கனமாகப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிரதமரின் அறிவுரையை ஏற்று, மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் தங்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, அத்தியாவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கினர்.
ஆனால், மத்தியப் பிரதேச மாநில பாஜக பிரமுகரும், அம்மாநிலப் பாடநூல் கழகத்தின் தலைவருமான சவுபாக்ய சிங் தாக்கூர், பிரதமரின் வேண்டுகோளைப் புறக்கணித்து, உஜ்ஜயினிலிருந்து போபாலுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொண்ட ஊர்வலத்தை நடத்தியுள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்பதற்காக அவர் சென்றபோது இந்த வாகன அணிவகுப்பு நடைபெற்றது. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, முதல்வர் மோகன் யாதவ் உடனடியாக சவுபாக்ய சிங்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தேசிய நலன் சார்ந்த வேண்டுகோளைப் புறக்கணித்ததற்கும், அரசின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாததற்கும் விளக்கம் கேட்டிருப்பதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சவுபாக்ய சிங் பாடநூல் கழகத்தின் அலுவலகம் அல்லது வளாகத்திற்குள் நுழையவும், கழகத்திற்குச் சொந்தமான எந்தவொரு வசதியையும், வாகனத்தையும், ஊழியரையும் பயன்படுத்தவும், கழகம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கவும், நிர்வாகம் அல்லது நிதி சார்ந்த முடிவுகளில் கையெழுத்திடவும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட பாஜக தலைவர் ஹன்ஸ்ராஜ் விஷ்வ கர்மா, உ.பி அமைச்சரவையில் புதிய உறுப்பினராகச் சேர்க்கப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் சுமார் 80 வாகனங்களுடன் அவரை வரவேற்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் யோகி அரசு பயன்படுத்தும் புல்டோசரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அமைச்சரான ஹன்ஸ்ராஜ் இதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுவும் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.