நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை, மாறாக அண்ணாமலை தான் பாஜகவை இழந்துள்ளார் என பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு 15 பிரதமர்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இதில் பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சி ஒரு வரலாற்றுச் சாதனை என்று அவர் குறிப்பிட்டார். மோடியின் சாதனைகளைக் கண்டு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும், அவர் முதன்முறை பொறுப்பேற்றபோதே நிர்வாகத்தை முழுமையாகச் சீரமைத்தார் என்றும் கூறினார். மத்திய அரசின் திட்டங்கள், குறிப்பாக விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது நாம் 3-வது கட்ட ஆட்சியில் அடியெடுத்து வைத்துள்ளோம். வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே முக்கிய இலக்கு என்றும், இதற்காக தொழில் துறை, தனிமனித வளர்ச்சி, கல்வி, விவசாயம் மற்றும் இளைஞர்களின் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். அடுத்ததாக, மீண்டும் 4-வது முறையும் மக்களின் பேராதரவோடு பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வரிப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் உதவி மானியம் 341.7 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மீனாட்சி நித்திய சுந்தர் கூறினார். தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.506 கோடி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆண்டுதோறும் தமிழகத்தின் பொருளாதாரம் உயர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். திருச்சியின் வளர்ச்சிக்கு மட்டும் ரூ5,650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் கல்லூரிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கப்பட்டு, மாநிலம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை, 77 ரயில் நிலையங்கள் புதுப்பித்தல், மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேச விமான நிலைய மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துதல் என நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து முக்கியப் பணிகளையும் மத்திய அரசு செய்துள்ளது.
தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு எந்தத் தாமதமும் செய்யவில்லை என்றும், ஏதேனும் நிர்வாக ரீதியிலான காரணங்களால் மட்டுமே அது தள்ளிப் போகிறது என்றும் அவர் விளக்கினார். நிகழ்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு, மும்மொழி எதிர்ப்பைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் வெறும் மொழி அரசியல் மட்டுமே நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். இன்றைய காலகட்டத்தில் நாம் பல மொழிகளைத் தெரிந்து கொள்வது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். பாஜகவின் வளர்ச்சி என்பது தனிமனிதரைச் சார்ந்தது அல்ல என்றும், கட்சி வளர்ச்சியில் சில தடைகள் வரலாம், ஆனால் தன் உயிரையே தியாகம் செய்த தியாகிகளால் உருவான கட்சி இது என்றும் அவர் குறிப்பிட்டார். அண்ணாமலைக்காக இயக்கத்தில் இருந்து சிலர் வெளியேறியிருக்கலாம், ஆனால் அது கட்சிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை. அண்ணாமலை தான் பாஜகவை இழந்துள்ளார். அவருக்குத்தான் தற்போது கட்டம் சரியில்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகவும் வலுவாகவும் நிலையாகவும் உள்ளது, வரும் நாட்களில் மேலும் பல புதிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இணையும். வருங்காலத்தில் மாற்றம் வரும். அது எந்த மாதிரியான மாற்றம் என்பது போகப்போக தான் தெரியும். ஒருவேளை திமுக கூட்டணிக்கு வந்தால் அப்போது பார்க்கலாம் என அவர் தெரிவித்தார்.