சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே, மேலப்பூங்குடி கிராமத்தில் சோகம் சூழ்ந்துள்ளது. ராஜராஜசோழன் என்பவரின் மகள் அபிநயா, 12 வயதான இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த அபிநயா, நேற்று முன்தினம் தனது தாயுடன் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, சிறுமியின் தாய் வீட்டிற்குச் சென்றதாகவும், சிறுமி அபிநயா மட்டும் ஆடுகளை கவனித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், மாலை வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆடுகள் மட்டும் தனியாக வீடு திரும்பியதால், என்ன நடந்திருக்கும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல்வேறு இடங்களில் சிறுமியைத் தேடிப் பார்த்தனர்.
பல மணி நேரத் தேடலுக்குப் பிறகும் அபிநயா கிடைக்காத நிலையில், அப்பகுதியில் உள்ள ஊருணியில் சிறுமியின் சடலம் மிதப்பதாக தகவல் வெளியானது. உடனடியாக கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, அது அபிநயாதான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக மதகுபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை ஊருணியில் இருந்து மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி எப்படி உயிரிழந்தார், இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அவரது மரணத்திற்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.