இந்திய ஒன்றியத்தின் 22-வது மாநிலமாக உருவான சிக்கிம் மாநிலத்தின் சிறப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
'நமக்யால் ராஜவம்சத்தின் ஆட்சியின் கீழ் தனி ராஜ்யமாக விளங்கிய சிக்கிம், பொதுமக்களின் பேராதரவுடன் நடைபெற்ற பொது வாக்கெடுப்பிற்குப் பிறகு நம் தேசத்துடன் இணைந்தது. பல அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் ஜனநாயகப் போராட்டங்களுக்குப் பிறகு, 1975-ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பின் முடிவின்படி, சிக்கிம் இந்திய ஒன்றியத்தின் 22-வது மாநிலமாக முறைப்படி இணைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தில், சிக்கிம் மாநில மக்களை நான் வாழ்த்துகிறேன்' என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளம், பூடான், திபெத் ஆகிய மூன்று அண்டை நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சிக்கிம், நமது தேசப் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பிரதான அரணாகத் திகழ்கிறது. அதன் புவியியல் முக்கியத்துவம் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு மேலும் வலு சேர்க்கிறது.
மேலும், சிக்கிம் மாநிலம் இயற்கை விவசாயத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. 2016-ஆம் ஆண்டிலிருந்து முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே முழுமையான இயற்கை விவசாய மாநிலம் என்ற பெருமையைப் பெற்று, நிலையான வேளாண்மைக்கான தனது அர்ப்பணிப்பை இன்று வரை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இது மற்ற மாநிலங்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். பாரதத்தின் கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்களில் ஆழமாக வேரூன்றி, தன் பாரம்பரியத்தைக் காத்து, நம்முடன் இணைந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் சிக்கிம் மாநில மக்களை வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்கிறேன்' என்றும் கவர்னர் ஆர்.என். ரவி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.