இன்றைய தலைமுறையினரும் தவறாமல் கேட்க வேண்டிய எஸ். ஜானகியின் மறக்க முடியாத 10 பாடல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1991ஆம் ஆண்டு வெளியான 'தளபதி' திரைப்படத்தில், இளையராஜா, ரஜினி, வைரமுத்து கூட்டணியில் உருவான 'சின்னத் தாய் அவள்' பாடலை ஜானகியம்மா பாடியிருப்பார். சிறு வயதில் குழந்தையைத் தொலைத்து, முதுமையில் அதனைத் தேடும் தாயின் குரலில் மென்சோகத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.
2014ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில், அனிருத் இசையில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற 'அம்மா, அம்மா… நீ எங்க அம்மா' பாடலில், இறந்த பிறகு மகனை ஆற்றுப்படுத்தும் தாயின் குரலாக ஜானகியம்மா பாடியிருப்பார். தாயை இழந்தவர்களுக்கு இவரின் குரல் என்றும் ஆறுதல் அளிக்கும்.
1998ஆம் ஆண்டு மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான 'உயிரே' படத்தில் வரும் 'நெஞ்சினிலே, நெஞ்சினிலே' பாடல், காதலில் தவித்து, திருமணக் கனவில் மூழ்கியிருக்கும் இளம் பெண்ணின் ஏக்கத்தை ஜானகியம்மா தன் குரலால் உயிரூட்டியிருப்பார்.
1985ஆம் ஆண்டு பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் வெளியான 'முதல் மரியாதை' படத்தில், 'பூங்காற்று திரும்புமா', 'வேட்டி வேறு வாசம்' உள்ளிட்ட இரண்டு பாடல்களை ஜானகியம்மா பாடியிருப்பார். இதில், சிவாஜி கணேசனின் தனிமையையும் சோகத்தையும் ராதாவிற்கு ஆறுதல் கூறும் விதமாக 'சுக ராகம் சோகம் தானே…' என அவர் பாடியிருப்பார்.
1980ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான 'ஜானி' படத்தில், ரஜினி – ஸ்ரீதேவி காதலைச் சொல்லும் 'காற்றில் எந்த கீதம்' பாடல் இடம்பெற்றது. காதலன் எப்போது திரும்புவான் என்ற ஏக்கத்துடனும், காதல் தருணங்களை நினைத்து சோகத்துடனும் காதலி பாடும் காட்சிகளுக்கு ஜானகி அருமையாக உயிர் கொடுத்திருப்பார்.
1993ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான 'மறுபடியும்' படத்தில் இடம்பெற்ற 'ஆசை அதிகம் வச்சு…' பாடல், பெண்கள் மத்தியில் இன்றும் கொண்டாட்டப் பாடலாக விளங்குகிறது. காதல், சோகம், தாய்மை போன்ற உணர்வுகளுக்கு அப்பால், பெண்களின் கொண்டாட்ட உணர்வை ஜானகி இந்த பாடலில் வெளிப்படுத்தியிருப்பார். 'சின்னப்பொண்ணு நான்… செந்தூரப்பூ நான்…' என ஒரு பெண்ணின் கர்வத்துடன் கவித்துவமாக பாடியிருப்பார்.
1978ஆம் ஆண்டு வெளியான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில், கமல்ஹாசன் – ஜானகி கூட்டணியில் உருவான 'நினைவோ ஒரு பறவை' பாடல், காதலன் – காதலி தங்களின் அன்யோன்யத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக அமைந்திருக்கும். பாடகர் கமல்ஹாசனுக்குக் கடும் போட்டியாக, காதலியின் காதல் வேட்கையை ஜானகியம்மா தன் குரலில் வெளிப்படுத்தியிருப்பார்.
1999ஆம் ஆண்டு வெளியான 'சங்கமம்' திரைப்படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜானகி பாடிய 'மார்கழி திங்கள் அல்லவா' பாடல், பாரம்பரிய பரதநாட்டிய நாயகி, கிராமிய இசையில் சிறந்து விளங்கும் தன் காதலன் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.
1999ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 'ஜோடி' திரைப்படத்தில் 'காதல் கடிதம் தீட்டவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருப்பார். உன்னி மேனன் பாடியிருந்தாலும், அவரை மிஞ்சும் அளவுக்கு ஜானகியின் குரல் இந்த பாடலுக்கு மேலும் மெருகூட்டியிருக்கும்.
1962ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் – சாவித்ரி நடிப்பில், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் வெளியான 'பாத காணிக்கை' படத்தில் இடம்பெற்ற 'பூஜைக்கு வந்த மலரே வா' பாடலை மறைந்த பழம்பெரும் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸுடன் இணைந்து ஜானகி பாடியிருப்பார்.
இவை தவிர, 'சித்திரமே நில்லடி', 'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன', 'மாம்பழத்து வண்டு', 'ஆண்டொன்று போனால்', 'கூந்தலிலே நெய் தடவி', 'அழகுக்கு மறு பெயர் பெண்ணா', 'உலகம் அழகு கலைகளின் சுரங்கம்', 'அங்கே வருவது யாரோ', 'தேன் சிந்துதே வானம்', 'நான் பேச வந்தேன்', 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி', 'நினைவோ ஒரு பறவை', 'ஒரு வானவில் போலே', 'ஆழக்கடலில் தேடிய முத்து' போன்ற பல பாடல்களும் எஸ். ஜானகியின் குரலில் என்றும் நிலைத்து நிற்கும்.
